.jpeg?w=480&auto=format%2Ccompress&fit=max)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
நேற்று (ஜூலை 27) நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 44 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய மனு பாக்கர் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 28) பிற்பகலில் நடந்த இறுதிச் சுற்றில் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார் மனு பாக்கர். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பட்டியல் கணக்கைத் தொடங்கியது இந்தியா.
மேலும் துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மனு பாக்கர்.
இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த ராஜ்ஜியவர்தன் சிங் ரத்தோர் (வெள்ளி-2004), அபினவ் பிந்த்ரா (தங்கம்-2008), ககன் நரங் (வெண்கலம்- 2012) ஆகிய வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மனு பாக்கர், 2020-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ளார். ஆனால் அப்போது பதக்கம் எதையும் அவர் வெல்லவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.