சென்னை டி20: தொடரை சமன் செய்த இந்திய அணி!

ஏற்கெனவே, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
சென்னை டி20: தொடரை சமன் செய்த இந்திய அணி!
சென்னை டி20: தொடரை சமன் செய்த இந்திய அணி!BCCIWomen
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதன் பிறகு நடைபெற்ற டெஸ்டில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் தெ.ஆ. அணி வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தெ.ஆ. அணியில் எந்த ஒரு வீராங்கனையும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. அதிகபட்சமாக பிரிட்ஸ் 20 ரன்கள் எடுத்தார். ராதா யாதவ், பூஜா வஸ்த்ரகர் ஆகியோரின் அபாரப் பந்துவீச்சால் 84 ரன்களுக்கு சுருண்டது தெ.ஆ. அணி.

பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி அதிரடியாக விளையாடி 10.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷெஃபாலி வெர்மா 25 பந்துகளில் 27 ரன்களும், மந்தனா 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in