
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் அடிக்க இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 114 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இருவரும் நேற்று வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்தினார்கள். ஜடேஜா டெஸ்டில் 23-வது அரை சதத்தைக் கடந்தார். ஷுப்மன் கில் முதன்முறையாக டெஸ்டில் 150 ரன்களை கடந்தார். கில் - ஜடேஜா இணை 6-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 89 ரன்களுக்கு ஜாஷ் டங்கின் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். கில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 180 ரன்களை தொட்டார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் எனும் மைல்கல்லை எட்டினார். அவர் 180 ரன்களிலிருந்து 200 ரன்களுக்கு விரைவாகச் சென்று இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது இந்தியர், முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றார்.
இந்திய அணியின் ஸ்கோரும் 500 ரன்களை கடந்தது. ஷுப்மன் கில் - வாஷிங்டன் சுந்தர் இணை 7-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. ஷுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்த பிறகும்கூட கவனத்தைச் சிதறவிடாமல் அட்டகாசமாக பேட் செய்து 250 ரன்களை எடுத்தார். டெஸ்டில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் எனும் கோலியின் சாதனையையும் ஷுப்மன் கில் முறியடித்தார். அரை சதத்தை நெருங்கிய வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களுக்கு ஜோ ரூட் பந்தில் போல்டானார்.
டெயிலண்டர்களுடன் பேட் செய்து இந்திய அணியின் ஸ்கோரை 600-ஐ நெருங்கச் செய்துவிடலாம் என கில் முயற்சித்தார். இவரும் இங்கிலாந்தின் ஷார்ட் பந்து திட்டத்தில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 6 ரன்களுக்கும் முஹமது சிராஜ் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். பிரசித் கிருஷ்ணா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரை முஹமது சிராஜ் வீசவிருந்தார். கில் வரும் வரை கேப்டனாக களத்தில் செயல்பட்ட ரிஷப் பந்த், ஆகாஷ் தீப்பை முதல் ஓவர் வீசச் சொன்னார். முதல் ஓவரில் ஸாக் கிராலே இரு பவுண்டரிகள் விளாச 12 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
மூன்றாவது ஓவரில் உள்ளே வந்தார் கில். ஆகாஷ் தீப்பை இந்த முனையிலிருந்து பந்துவீசுமாறு பந்த் சொன்னது பலன் தந்தது. மூன்றாவது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய 4-வது பந்தில் பென் டக்கெட் டக் அவுட் ஆனார். இரட்டைச் சதமடித்த களைப்பு எதுவும் இல்லாமல் ஸ்லிப்பில் அற்புதமாக கேட்ச் பிடித்தார் ஷுப்மன் கில். ஆலி போப் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இந்த முறை கேஎல் ராகுல் இரு முயற்சிகளில் கேட்ச் பிடித்தார். இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் ஆட்டம் கண்டது. தொடக்கம் முதல் சிறப்பாகப் பந்துவீசி வந்த சிராஜுக்கு பரிசாக கிராலே விக்கெட் கிடைத்தது. ஸ்லிப்பில் கேட்சை தவறவிட மாட்டேன் என கருண் நாயர் விடாப்பிடியாக இருக்கிறார்.
அனுபவமிக்க ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் சற்று தாக்குப்பிடித்து விளையாடினார்கள். புரூக் இடையில் சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் பக்கம் திருப்பப் பார்த்தார். இரண்டாவது நாள் ஆட்டம் முடியும் வரை இங்கிலாந்து மேற்கொண்டு விக்கெட்டை இழக்கவில்லை. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்து 510 ரன்கள் பின்தங்கியுள்ளது.
மொத்தத்தில் இரண்டாவது நாளில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.