பிஜிடி முதல் டெஸ்டில் ரோஹித் விளையாடாத பட்சத்தில், பும்ரா அணியை வழிநடத்துவார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.
ஏற்கெனவே சிராஜ், வாஷிங்டன் சுந்தர், கில், ஆகாஷ் தீப், ஜெயிஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற நிலையில், மற்ற வீரர்களும் பயிற்சியாளர்களும் இன்று புறப்படுகிறார்கள்.
முன்னதாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கம்பீர் பேசியதாவது
“முதல் டெஸ்டில் ரோஹித் விளையாடுவது குறித்து தற்போது உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அது தொடரின் தொடக்கத்தில்தான் தெரியும்.
ரோஹித் விளையாடவில்லை என்றால், அவர் இடத்தை நிரப்ப அபிமன்யு ஈஸ்வரன், கே.எல். ராகுல், கில் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, முதல் டெஸ்ட் தொடங்கும் முன்பு சிறந்த 11 வீரர்களை நாங்கள் தேர்வு செய்வோம்.
கே.எல். ராகுல் மேல் வரிசையில் விளையாடுவார், 3-வது பேட்டராகவும் விளையாடுவார், 6-வது பேட்டராகவும் விளையாடுவார். அவரால் விக்கெட் கீப்பிங்கும் செய்ய முடியும். மிகவும் திறமையான வீரரால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். எனவே, அணிக்கு தேவைப்படும்போது அவர் நிச்சயம் தன்னுடைய வேலையை சரியாக செய்வார்.
ஒருவேளை முதல் டெஸ்டில் ரோஹித் விளையாடாத பட்சத்தில் பும்ரா அணியை வழிநடத்துவார்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2022-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.