
குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்று டிராவில் முடிந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த குகேஷும் சீனாவின் டிங் லிரனும் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த நவ.25 அன்று தொடங்கியது.
டிசம்பர் 14 வரை கிளாசிகல் முறையில் 14 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தேவைப்பட்டால் டை பிரேக் முறை பயன்படுத்தப்படும். சாம்பியன் பட்டம் பெற 7.5 புள்ளியைப் பெற வேண்டும்.
குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரன், குகேஷை வீழ்த்தி ஒரு புள்ளியுடன் முன்னிலை பெற்றார்.
2-வது சுற்று டிராவில் முடிந்தது. எனினும் 3-வது சுற்றில் குகேஷ், டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார். மேலும், கிளாசிகல் முறையில் முதல்முறையாக டிங் லிரனை வீழ்த்தியதும் அப்போதுதான்.
3-வது சுற்றின் முடிவில் இருவரும் 1.5 - 1.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
4-வது சுற்றுக்கு முன்பாக ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டது. 4-வது சுற்றும் டிராவில் முடிய இருவரும் 2 - 2 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
நேற்று 5-வது சுற்று நடைபெற்றது. இருவரும் வழக்கம்போல் சிறப்பாக விளையாட, இந்த ஆட்டத்திலும் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யமுடியவில்லை. எனவே, 5-வது சுற்றும் டிராவில் முடிந்தது.
5-வது சுற்றின் முடிவில் இருவரும் 2.5 - 2.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 6-வது சுற்று நடைபெற்றது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்திலும் முடிவு கிடைக்கவில்லை. இருவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாட இந்த ஆட்டமும் டிராவில் முடிந்துள்ளது.
6-வது சுற்றின் முடிவில் இருவரும் 3 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
இதுவரை 4 சுற்றுகள் டிராவில் முடிந்தது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நாளை ஓய்வு நாள். டிச. 3 அன்று 7-வது சுற்று நடைபெறவுள்ளது.