
மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் பேட்டரை அவமானப்படுத்தும் விதத்தில் செயல்பட்டதற்காக லக்னெள சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதிக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் ஆட்டத்தில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னெள, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.
லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 191/5 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ள மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
தில்லியைச் சேர்ந்த திக்வேஷ் ராதி, ஐபிஎல் 2025 போட்டியில் லக்னெள அணிக்காக விளையாடி வருகிறார். இது அவருடைய முதல் ஐபிஎல் போட்டி. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நமன் திர்ரை வீழ்த்தியபிறகு அவர் அருகே சென்று நோட்புக்கில் எழுதுவது போல சைகை செய்து விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடினார் லக்னெள சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதி.
இதையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக திக்வேஷ் ராதிக்கு 50% அபராதமும் 2 அபராதப் புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு இதேபோன்றதொரு செயலுக்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகும் இதுபோல நோட்புக் கொண்டாட்டத்தை மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 25% அபராதமும் ஒரு அபராதப் புள்ளியும் விதிக்கப்பட்டது.
தற்போது மூன்று அபராதப் புள்ளிகளைக் கொண்டுள்ளார் திக்வேஷ் ராதி. 36 மாதங்களில் இன்னும் ஒரு புள்ளியை அவர் பெற்றால் ஓர் ஆட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். எனவே இனிமேல் அவர் கூடுதல் எச்சரிகையுடன் இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.