
நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாகத் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சிஎஸ்கே தோற்றுள்ளது.
முதல் 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியைச் சந்தித்த சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது கடினமாகியுள்ளது. சிஎஸ்கேவுக்கு இன்னும் 8 ஆட்டங்கள் மீதமுள்ளன.
ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை 14 புள்ளிகளைப் பெற்றால்கூட, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிபடுத்த முடியாது. கடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே 14 புள்ளிகளைப் பெற்றும்கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபியிடம் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சிஎஸ்கே.
எனவே, சிஎஸ்கே மீதமுள்ள 8 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 7-ல் வெற்றியைப் பெற வேண்டும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளைப் பெற்று முதல் நான்கு இடங்களை ஓரளவுக்கு உறுதி செய்ய முடியும்.
மீதமுள்ள 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிரு இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.
சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸை ஏப்ரல் 14 அன்று லக்னௌவில் எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து, மும்பை வான்கடேவில் ஏப்ரல் 20 அன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.