சிஎஸ்கேவின் புதிய தேர்வு: யார் இந்த உர்வில் படேல்?

விக்கெட் கீப்பர் பேட்டராகவும் இருப்பதால் சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமான வீரராகப் பார்க்கப்படுகிறார்.
சிஎஸ்கேவின் புதிய தேர்வு: யார் இந்த உர்வில் படேல்?
1 min read

சிஎஸ்கே அணியில் புதிய வீரர் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணியில் இருந்த வன்ஷ் பேடி காயமடைந்துள்ளதால் ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக குஜராத்தைச் சேர்ந்த 26 வயது விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேலை ரூ. 30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.

2023 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு குஜராத் அணிக்குத் தேர்வானாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் உர்வில் படேலைத் தேர்வு செய்யவில்லை. இதற்குப் பிறகுதான் தனது கோபத்தை பேட்டிங்கில் காண்பித்தார்.

2024 சையத் முஷ்டக் அலி போட்டியில் திரிபுராவுக்கு எதிராக 28 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் 2-வது அதிகவேக சதத்தை அடித்தார். டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்தியர் என்கிற சாதனையையும் படைத்தார். அந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார் உர்வில் படேல்.

அதன்பிறகு உத்தரகண்டுக்கு எதிராக 36 பந்துகளில் சதமடித்து மீண்டும் அசத்தினார். கடந்த வருடம் 50 ஓவர் விஜய் ஹசாரா கோப்பைப் போட்டியில் அருணாசலப் பிரதேசத்துக்கு எதிராக 41 பந்துகளில் சதமடித்தார். விக்கெட் கீப்பர் பேட்டராகவும் இருப்பதால் சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமான வீரராகப் பார்க்கப்படுகிறார்.

குஜராத்தின் வத்நகரில் பிறந்த உர்வில் படேல், வைரத்துக்குப் புகழ்பெற்ற பலன்பூரில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 2017-18-ல் பரோடாவுக்காக டி20யில் அறிமுகம் ஆன உர்வில் படேல், ஒரு பருவத்துக்குப் பிறகு கூடுதல் வாய்ப்புகளுக்காக குஜராத் அணிக்கு மாறினார். இதுவரை 10 முதல்தர ஆட்டங்கள், 22 லிஸ்ட் ஏ, 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அதிரடியாக விளையாடுவது எனக்கு இயல்பாக வரும் என்கிறார் உர்வில் படேல். இப்படியொரு வீரரைத்தான் சிஎஸ்கே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in