பஞ்சாபிடம் தோற்று பிளேஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே!

சஹல் 4 விக்கெட்டுகள் எடுத்து பெரிய திருப்பத்தைக் கடைசியில் ஏற்படுத்தினார்.
பஞ்சாபிடம் தோற்று பிளேஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே!
ANI
1 min read

சிஎஸ்கேவின் ஐபிஎல் 2025 பிளேஆஃப் கனவு முழுவதுமாகத் தகர்ந்துவிட்டது. சென்னையில் பஞ்சாபுக்கு எதிராகத் தோற்ற சிஎஸ்கே, முதல் அணியாகப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆச்சர்யமாக சிஎஸ்கே அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை. பஞ்சாப் அணியில் காயமடைந்த மேக்ஸ்வெலுக்குப் பதிலாக சூர்யான்ஸ் ஷெட்ஹே சேர்க்கப்பட்டார்.

இந்தமுறை சிஎஸ்கே அணியின் இளம் தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். ரஷீத் 11, மாத்ரே 7 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். 3-வது, 4-வது பேட்டர்களாக சாம் கரணும் ஜடேஜாவும் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார்கள். ஜடேஜா 4 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் சிஎஸ்கே 48 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு சாம் கரணும் பிரேவிஸும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். 11.1 ஓவர்களில் 100 ரன்களை அடைந்து பெரிய ஸ்கோருக்குத் தயாரானது சிஎஸ்கே. 30 பந்துகளில் அரை சதமெடுத்த சாம் கரண், சதமடிக்கும் ஆர்வத்தை உண்டாக்கினார். ஆனால் 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 88 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் கடைசி ஓவர்கள் தோனி, துபே வசம் வந்தன. தோனி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 18.1 ஓவரின்போது சிஎஸ்கே 184/5 என இருந்தது. இதனால் 200 ரன்கள் நிச்சயம் என்கிறபோது சஹல் வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது சிஎஸ்கே. இதனால் 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சஹல் 4 விக்கெட்டுகள் எடுத்து பெரிய திருப்பத்தைக் கடைசியில் ஏற்படுத்தினார்.

பஞ்சாப் இன்னிங்ஸில் ஆரம்பத்திலிருந்தே பிரியன்ஸ் ஆர்யாவும் பிரப்சிம்ரன் சிங்கும் சுறுசுறுப்பாக விளையாடி ரன்கள் எடுத்தார்கள். ஆர்யா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரனும் ஷ்ரேயஸ் ஐயரும் அருமையான கூட்டணி அமைத்து சிஎஸ்கேவைத் திணறடித்தார்கள். பவர்பிளேயில் 50 ரன்கள் எடுத்த பஞ்சாப், 11 ஓவரில் 100 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி அருமையாக நகர்ந்தது. 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பிரப்சிம்ரன். ஷ்ரேயஸ் ஐயர், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அற்புதமாக விளையாடினார். 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போதே பஞ்சாபின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும் கடைசியில் லேசாகப் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்தது பஞ்சாப். 194/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற பஞ்சாப், புள்ளிகள் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தத் தோல்வியால் முதல்முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது சிஎஸ்கே.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in