சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, சாம் கரனைத் தொடர்ந்து 10 வீரர்களை வெளியேற்றி, ஐந்து வீரர்களைத் தக்க வைப்பதாக அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், ஏலத்திற்கு முன்பு அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 19-வது ஐபிஎல் 2026-ல் நடைபெறவுள்ள நிலையில் இந்தப் பட்டியலை 10 அணிகளும் இன்று மாலைக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வீரர்கள் வர்த்தகப் பரிமாற்றம் நடந்தது.
இதையடுத்து இதுவரை ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 5 வீரர்களைத் தக்க வைக்கும் அணி, 10 வீரர்களை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தக ரீதியாக அனுப்பப்பட்ட நிலையில், இதர வீரர்களின் நீக்க பட்டியலை சென்னை அணி இன்று வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், மதீஷா பதிரனா, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், ஆண்ட்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் விடுவிக்கப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
மறுபுறம், மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. ஜடேஜா மற்றும் சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியுள்ளது.
Chennai Super Kings has announced that it is releasing 10 players, after Ravindra Jadeja and Sam Curran, and retaining five players.