
ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில் நேற்று நடைபெற்ற ஏஞ்சலா கரினி - இமானே கெலிஃப் இடையேயான ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நடைபெற்றதால் அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நீடித்த நிலையில், இமானே கெலிஃபின் முரட்டுத்தனமான ஒரு குத்துக்கு பிறகு கரினி வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து கரினியின் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இனி விளையாட முடியாது என்று நடுவரிடம் கூறிவிட்டார். இதனால் கெலிஃப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினியை எதிர்த்து விளையாடியது ஒரு பயாலஜிக்கல் ஆணா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஏற்கெனவே, 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதித் தேர்வில் தோல்வியுற்றதால் கெலிஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவர் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒலிம்பிக்ஸில் இமானே கெலிஃப் பங்கேற்றது எப்படி?
இமானே கெலிஃபின் பாஸ்போர்ட்டில் தன்னை ஒரு பெண் என்றே அடையாளப்படுத்திக் கொண்டதால் அவர் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, “பாஸ்போர்ட்டில் ஒருவருக்கு என்ன பாலினம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் தான் வீரர்களின் பாலினம் அடையாளம் காணப்படும்” என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
எனவே இமானே கெலிஃப் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க தகுதியானவர் என்றும் அறிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
இது குறித்து ஒரு சில மருத்துவர்கள், “பெண்ணாக வளர்க்கப்படும் நபர் அவருள் அதிக அளவில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் இருக்கும் ஈஸ்ட்ரஜன் விளைவால் உடல் பலம் தேவைப்படும் விளையாட்டுகளில் (உதாரணம் குத்துச்சண்டை, தடகளப்போட்டிகள் ஆகியவற்றில்) பிற பெண்களை விட எளிதாக வெல்லலாம் என்று கூறுகின்றனர்.
இமானே கெலிஃபின் பாலினத்தை கண்டறியும் சோதனையில் அவரது உடலில் எக்ஸ்-ஒய் குரோமோசோம்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு எக்ஸ்-எக்ஸ் குரோமோசோம்கள் தான் இருக்கும். ஆண்களுக்குத் தான் எக்ஸ்-ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.
இதற்கு முன்பு பெண்களுக்கு எதிராக விளையாடிய பல ஆட்டங்களில் இமானே கெலிஃப் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் ஏஞ்சலா கரினி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாத காரணத்தால், இமானே கெலிஃபை ஆண் எனக் கூறி நாடகம் ஆடியதாக ஒரு சிலரும், இமானே கெலிஃபை விமர்சித்து ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.