
பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பெர்த் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று அடிலெய்டில் தொடங்கிய 2-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள். படிக்கல், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெலுக்கு பதிலாக ரோஹித் சர்மா, அஸ்வின், கில் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஹேசில்வுட் விலக, அவருக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் பந்தில் ஜெயிஸ்வால் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதன் பிறகு ராகுலும் கில்லும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
கில் - ராகுல் ஜோடி 69 ரன்கள் எடுக்க ராகுல் 37 ரன்களுடன் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். அடுத்ததாக கோலி 7 ரன்களிலும், கில் 31 ரன்களிலும் வெளியேறினர். 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கத்தை செலுத்தியது ஆஸி. அணி.
முதல் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது.
2-வது பகுதியிலும் ஆஸி. அணி தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தியது. கேப்டன் ரோஹிட் சர்மா 3 ரன்களில் வெளியேற, ரிஷப் பந்த் - அஸ்வின் கூட்டணி அமைத்து ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர்.
ரிஷப் பந்த் 21 ரன்களிலும், அஸ்வின் 22 ரன்களிலும் ஆட்டமிழக்க நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடினார். ஸ்காட் போலாண்டின் ஒரே ஓவரில் 19 ரன்கள் எடுத்து அசத்தினார் நிதிஷ் ரெட்டி.
இறுதியில், 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்குச் சுருண்டது. மிரட்டலாக பந்துவீசிய ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.