பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக பாபர் ஆஸம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னதாக தங்கள் அணியின் கேப்டனை மாற்றப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து டி20 அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தனது பதவியிலிருந்து விலகப்போவதாகவும், மீண்டும் பாபர் ஆஸாமை கேப்டனாக கொண்டு வர அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பாபர் ஆஸம் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தன்னை கேப்டனாக நியமிக்குமாறு பிசிபியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக பாபர் ஆஸம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.