
பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆஸ்திரேலியாவுக்கான நாளாக அமைந்துள்ளது.
பெர்த் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று அடிலெய்டில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள். படிக்கல், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெலுக்கு பதிலாக ரோஹித் சர்மா, அஸ்வின், கில் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஹேசில்வுட் விலக, அவருக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சில் இந்திய அணி 180 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜெயிஸ்வால் வெளியேற, ராகுலும் கில்லும் நிதானமாக விளையாடி 69 ரன்களை சேர்த்தனர். இருவரும் முறையே 37, 31 ரன்களில் வெளியேறினர். கோலி 7 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில், நிதிஷ் ரெட்டி 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் பிறகு விளையாடிய ஆஸி. அணியில் கவாஜா விக்கெட்டை வேகமாக வீழ்த்தினாலும், மெக்ஸ்வீனி மற்றும் லபுஷேன் கூட்டணியைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினார்கள்.
முதல் நாள் முடிவில் ஆஸி. அணி, 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. மெக்ஸ்வீனி 38 ரன்களிலும், லபுஷேன் 20 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.