
ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை மிகவும் விரும்புவது இதுபோன்ற பரபரப்பான முடிவுகளைக் கொண்டிருப்பதால் தான்.
தில்லி அணிக்கு லக்னெள 210 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பவர்பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது தில்லி. பிறகு 65/5 என்கிற நிலையில் எந்த அணியால் 210 ரன்கள் என்கிற இலக்கை வெற்றிகரமாக விரட்ட முடியும்? கதை முடிந்தது என்று நினைத்தால் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் வந்துகொண்டே இருந்தன. இத்தனை விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியாக விளையாடுவதை நிறுத்தவே முடியாத சூழ்நிலை. இந்தச் சூழலில் கீழ்நடு வரிசை பேட்டர்கள் தில்லி அணிக்கு அற்புதமாகக் கைகொடுத்தார்கள். மற்ற அணிகள் இதை ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்ளலாம். அக்ஷர் படேல் (22), ஸ்டப்ஸ் (34), விப்ராஜ் நிகம் (39) என இவர்களின் அதிரடி ஆட்டத்தால் ரன்ரேட் மேலும் எகிறாமல் கைக்கெட்டும் தூரத்திலேயே இருந்தது.
கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி 3 ஓவர்களில் கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டும், 39 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் அதுவரை சற்று நிதானமாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா, தனது சுயரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கினார். ரவி பிஸ்னாய் ஓவரின் கடைசி 3 பந்துகளில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். 19-வது ஓவரில் குல்தீப் யாதவ் அவுட் ஆனாலும் 16 ரன்கள் கிடைத்தன. பதற்றமான கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து தில்லி அணிக்கு மறக்க முடியாத வெற்றியை அளித்தார் அஷுதோஷ் சர்மா. 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள். நம்பிக்கையுடன் விளையாடிய இந்த ஆட்டம் அஷுதோஷ் சர்மாவை இந்திய அணி வரை அழைத்துச் செல்லவும் வாய்ப்புள்ளது.
முதல் இன்னிங்ஸில் லக்னெள அணியின் பேட்டிங், தில்லி அணிக்கு நேர்மாறாக இருந்தது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் 3-வதாகக் களமிறங்கிய நிகோலஸ் பூரன் 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் எடுத்து 15 ஓவர்களுக்கு முன்பே 170 ரன்கள் வரை ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனால் கடைசி 5 ஓவர்களில் லக்னெள அணி பட்டையைக் கிளப்பப் போகிறது எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக லக்னெள அணி கடைசி 5 ஓவர்களில் சொதப்பியது. கேப்டன் ரிஷப் பந்த் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை மில்லர் அடிக்காமல் இருந்திருந்தால் லக்னெளவால் 200 ரன்களைக் கூடத் தாண்டியிருக்க முடியாது. லக்னெள அணி இந்தப் பகுதியில் செய்த தவறு தான் பிற்பாடு அவர்களைச் சிக்கலில் மாட்ட வைத்தது. கூடுதலாக இன்னும் 10 ரன்களைக் கடைசி 5 ஓவர்களில் எடுத்திருந்தாலே வெற்றியை அவர்களால் நெருங்கியிருக்க முடியும்.