
வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) முறைகேடு வழக்கில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த செஞ்சூரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக ராபின் உத்தப்பா உள்ளார். இவர் ஊழியர்களின் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்குப் பிடித்தம் செய்துள்ளார். ஆனால், பிடித்தம் செய்த தொகையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தவில்லை என்பது உத்தப்பா மீதுள்ள புகார்.
இதுதொடர்பாக பிஎஃப் மண்டல ஆணையர் கைது ஆணை பிறப்பித்துள்ளார். டிசம்பர் 4 அன்று கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புலகேஷிநகர் காவல் நிலையத்தில், பிஎஃப் மண்டல ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ராபின் உத்தப்பாவுக்கு டிசம்பர் 27 வரை அவகாசம் உள்ளது. அதற்குள் செலுத்த வேண்டிய ரூ. 23.36 லட்சத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், உத்தப்பா கைது ஆணையை எதிர்கொள்ள வேண்டும்.