
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லி ஐபிஎல் போட்டியில் என்ன சாதித்தது என அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தொடர்ச்சியாக ராஜஸ்தானின் வியூகமாக இருந்துள்ளது. இதனால்தான் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட 6 பேரில் யஷஸ்வி ஜெயிஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோரும் இடம்பெற்றிருந்தார்கள். ஜாஸ் பட்லரை விடுவித்தது. அவர் குஜராத் டைடன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியைத் தேர்வு செய்தது. ஏலத்தில் எடுக்கும்போது அவருக்கு வயது 13.
இந்நிலையில், ராஜஸ்தானின் இந்த வியூகத்தை விமர்சிக்கும் வகையில் ஈஎஸ்பின் கிரிகின்ஃபோவிடம் அம்பதி ராயுடு பேசியுள்ளார்.
"இளைஞர்கள் மீது நிறைய முதலீடு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அதிலிருந்து அவர்கள் பெற்றது என்ன? ராஜஸ்தான் ஐபிஎல் கோப்பையை வென்று 17 ஆண்டுகள் ஆகின்றன.
இது தான் தங்களுடைய பலம் என்று எப்போதும் சொல்வார்கள். கிரிக்கெட்டுக்காக பெரிய சேவை செய்வதைப் போல சொல்வார்கள். ஆனால், அப்படி கிடையாது. இங்கு போட்டி போட வந்துள்ளீர்கள்.
ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக வந்துள்ளீர்கள். எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிரூபிக்கப்பட்ட வழிகளை அணிகள் காட்டியுள்ளன. அது எதையும் இவர்கள் பின்பற்ற மாட்டார்கள். ஆனால், உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதால், நல்ல அணி என்று தங்களைப் பாராட்ட வேண்டும் என விரும்புவார்கள்" என்றார் அம்பதி ராயுடு.
சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடவில்லை. இதிலிருந்து குணமடைந்த அவர் தில்லிக்கு எதிரான ஆட்டத்தின்போது மீண்டும் காயமடைந்தார். இவருக்குப் பதில் ரியான் பராக் தான் ராஜஸ்தான் அணியை வழிநடத்தி வருகிறார்.