
பிஜிடி தொடரில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து, உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பிசிசிஐயால் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 8 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவருடன் உதவிப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் பொறுப்பேற்றார். ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த டி. திலீப் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரை இந்திய அணி இழந்ததால், பயிற்சியாளர் குழு மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மீது அழுத்தம் அதிகரித்தது. மோசமான ஃபார்ம் காரணமாக சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடவில்லை.
இந்நிலையில், பிஜிடி தொடரை இந்தியா இழந்ததன் காரணமாக உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், பிசிசிஐயால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பயணத்துக்குப் பிறகு இந்திய அணியில் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் அபிஷேக் நாயர் மற்றும் சிதான்ஷு கோடக் என இருவருமே இந்திய அணியுடன் இருந்தார்கள்.
மேலும், இந்திய அணியிலிருந்து உடற்தகுதிக்கான பயிற்சியாளர் சோஹம் தேசாயும் வெளியேறுகிறார். இவருக்குப் பதில் இந்திய அணியுடன் இணைந்து ஏற்கெனவே பணியாற்றிய அத்ரியன் லெ ரூ புதிய உடற்தகுதிக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் ரைட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவில் ஏற்கெனவே இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் அத்ரியன்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ள இவர், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.