
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2025-க்கான தேர்வு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. அதன்படி விண்ணப்பங்களை அனுப்ப இன்று (செப். 8) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வு நவம்பர் 15, 16 ஆகிய இரு நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலையுடன் கால அவகாசம் முடிவடையும் என்ற நிலையில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றுள்ளனர்.
மேலும், அண்மையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்படி சுமார் 1.17 லட்சம் பேர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வலைத்தளம் 3 மணி நேரத்திற்கு மேல் முடங்கியது.
இதற்கிடையில், இன்று மட்டும் சுமார் 3.5 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலைத்தளம் முடங்கியதால் ஏராளமானோர் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 10 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
TET Exams | TN Government | Teachers | Government Schools | Government aided schools |