
இதேபோல், ஆனந்தரங்கரும் 50 சிப்பாய்களுக்கு 6 ரூபாய் வீதம் மாதம் 300 கொடுக்க வேண்டும் என்றும், அந்தச் சிப்பாய்கள் தொடர்பான வழக்கு விசாரணையை இவரே மேற்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது. ‘பட்டணம் மூழ்கிப் போக உள்ள நிலையில் இந்த நடவடிக்கை சரியானதுதான்’ என வரவேற்ற ஆனந்தரங்கர், ‘நாம் அன்பது வருஷமாய் பிரான்சுக்காரனுடைய கொடியின் கீழே யிந்தப் பட்டணத்திலே யிருந்து கும்பினீரையும் சேவிச்சிருக்கச்சே கும்பினீர் உடமையைச் சாப்பிட்டு யிந்த சரீரத்திலே யிருக்கிற ரத்தம் அவர்களுதாயிருக்கச்சே நாம் அல்லவென்று சொல்ல யில்லை’ என்று நேர்மை, விசுவாசத்துடன் பேசுகிறார். அதேநேரம், ‘யென்னுடைய மன வற்த்தனை சிலவுக்கு, அரிசி, பருப்பு, நெய், காய்கறி, கோழியிதுகள் வாங்கினது பதினாயிரம் ரூபாய் மட்டும் ஊரிலே குடுக்க வேண்டியிருக்குது. அவர்களெல்லாம் வந்து பணம் கேழ்க்கிறார்கள். என்னுடைய காரியங்களெல்லாம் நாலு விதத்திலேயும் ஒண்ணுமில்லாமலிருக்கச்சே நான் எப்படிச் சிப்பாய்களுக்குச் சம்பளம் கொடுப்பது’ என்றும் கேட்கிறார். இது, ஆனந்தரங்கருக்கு இருந்த பொருளாதார இக்கட்டினைக் காட்டுகிறது.