கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண் அவமதிப்பு.. தலைவர்கள் கண்டனம்

கோவா விமான நிலையம்
கோவா விமான நிலையம்AAI GOA Airport/ FB
2 min read

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்புப் படை ஊழியரால் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் ஷர்மிளா ராஜசேகர். இவர் கோவாவில் சுற்றுலாவை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்ப நேற்று விமான நிலையத்தில் காத்திருந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் ஷர்மிளாவிடம் இந்தியில் பேசியுள்ளார்.

அதைக்கேட்ட ஷர்மிளா தனக்கு இந்தி தெரியாது எனக் கூறியுள்ளார். அதற்கு எங்கிருந்து வருகிறீர்கள் என அந்த அதிகாரி கேட்டுள்ளார். தமிழ்நாடு என ஷர்மிளா கூறியதும், தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி என அந்த அதிகாரி பதிலளித்துள்ளார். மேலும், கூகுள் செய்து பார்க்கும்படியும் கிண்டலாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து மேற்பார்வையாளரிடம் ஷர்மிளா புகார் அளித்திருக்கிறார். மேலும் விமான நிலைய குறைதீர்ப்பு அதிகாரிக்கும் இதுபற்றி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ஷர்மிளா. இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கோவா விமான நிலையத்தில் ஷர்மிளா அவமதிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளதாவது: கோவா விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in