தென் கொரியா: 5000 பயிற்சி மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கான தென் கொரிய அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சுமார் 5,000 பயிற்சி மருத்துவர்களின் மருத்துவ உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது தென் கொரியச் சுகாதார அமைச்சகம்.
மருத்துவக் கல்வி நிலையங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கான தென் கொரிய அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சியோல் நகரத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் சமீபத்தில் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் சுகாதார அமைப்புக்கு போதுமான ஆதரவு இல்லை என்பதையும் இந்தப் போராட்டம் வழியாக மருத்துவர்கள் வெளிப்படுத்தினர். மருத்துவ மாணவர்களின் வருடாந்திரச் சேர்க்கையை அதிகரிப்பதை விட, சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறினார்கள்.
இந்நிலையில் வேலைக்குத் திரும்புவதற்கான உத்தரவை மீறியும், மருத்துவப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் சுமார் 5,000 பயிற்சி மருத்துவர்களின் மருத்துவ உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாகத் தென் கொரியச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் சோ கியூ ஹாங் பேசியதாவது:
“பயிற்சி மருத்துவர்கள் தங்கள் உரிமத்தைத் தடை செய்யும் முன்பு வேலைக்குத் திரும்பினால் அரசாங்கம் குறைந்த நடவடிக்கைகளை எடுக்கும். அவ்வாறு செய்யும் மருத்துவர்களுக்குக் கருணை காட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளதால், அவர்கள் உடனடியாகத் திரும்பி வருவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சரிசெய்ய 158 ராணுவ மற்றும் பொதுச் சுகாதார மருத்துவர்களை நான்கு வாரக் காலத்திற்கு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி உள்ளோம்” என்றார்.