குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் சிஏஏ குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிஏஏ குறித்து ரஜினி பேசிய காணொளியை பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தன்னுடைய X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
2020-ல் சிஏஏ குறித்து ரஜினி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“சிஏஏ பற்றி நமக்கு தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். நிச்சயமாக இதன் மூலம் இந்தியாவில் வாழும் மக்களுக்கும் அவர்களது குடியுரிமைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. மற்ற நாடுகளிலிருந்து நம்முடைய நாட்டுக்கு வரும் மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதா, வேண்டாமா என்பதுதான் பிரச்னை.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என பீதி கிளப்பிவிட்டார்கள். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்கிருந்த முஸ்லிம்களில் பலரும் இந்தியாதான் என் நாடு என இங்கேயே இருந்தார்கள். அவர்களை எப்படி வெளியேற்ற முடியும்? அப்படி ஏதேனும் அவர்களுக்குப் பிரச்னை வந்தால் நான் தான் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். இது தொடர்பாக அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மக்களைத் தூண்டி விடுகிறார்கள். இலங்கை அகதிகள் 30 வருடங்களாக இங்கு உள்ளார்கள். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தரவேண்டும்” என்றார்.