கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த வருடம் 5-வது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள மோடி, வரும் 18 அன்று கோவைக்கு செல்கிறார்.
கோவையில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புப் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது வாகனப் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
கண்ணப்பன் நகர் பிரிவு சாலையில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாகன அணிவகுப்புப் பேரணியானது நடைபெற திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல் ஆணையர், சிறப்புப் பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதுவரை கோவையில் இதுபோன்ற வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்தது கிடையாது என்றும், பள்ளி மாணவர்களின் தேர்வுகளை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.