
பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் புத்தாண்டு (ஜனவரி 1) கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பெங்களூருவில் குவிந்து வருகிறார்கள். முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதால் பெங்களூரு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக பெங்களூரு முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளார்கள். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூருவில் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் நிகழும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது. அதேசமயம் மதுபானக் கடைகள் இரவு 11 மணியுடன் மூடப்பட வேண்டும்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நிகழும் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் அளவுக்கதிகமானோர் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்காகப் பங்கேற்பாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட வேண்டும். பார்வையாளர்களின் அடிப்படை விவரங்களையும் சேரித்துக்கொள்ள வேண்டும்.
விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள மேம்பாலங்களைத் தவிர இதர மேம்பாலங்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதி கட்டுப்படுத்தப்படும். வாகன ஓட்டிகளிடம் தகுந்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
போதை மருந்து உட்கொண்டதாகச் சந்தேகத்தை ஏற்படுத்தும் நபர்களிடம் பரிசோதனை நடத்தப்படும்.
எம்ஜி ரோடு மெட்ரோ நிலையம் டிசம்பர் 31 அன்று இரவு 11 மணியுடன் மூடப்படும். காலை 1 மணிக்குப் பிறகே மீண்டும் திறக்கப்படும்.