முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த வருடம் ஜூன் 14 அன்று அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததாக இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால், இந்த வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்னும் 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.