உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டி கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டது.
கர்நாடகத்திலும் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளில் ரோடமைன்-பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவது தெரியவந்த காரணத்தால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
“உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டி கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் வழங்கப்படும்.
கர்நாடகம் முழுவதும் 171 இடங்களிலிருந்து கோபி மஞ்சூரியன் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ததில் அதில் 107 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டி கலந்தது தெரியவந்தது. மேலும் 25 பஞ்சு மிட்டாய் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ததில் அதில் 15 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டி கலந்தது தெரியவந்தது.
இதனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொருட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்துள்ளோம்” என்றார்.