சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவேன்: அரவிந்த் கேஜ்ரிவால்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் குழப்பங்களைத் தவிர்த்து, தங்களின் வலிமையையும் வெளிப்படுத்த...
அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்ANI
1 min read

பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6-வது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில் ‘சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுப்பேன்’ என தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு அமலாக்கத் துறை அனுப்பிய 5 அழைப்பாணைகளை அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்துள்ள நிலையில் 6-வது முறையாக வந்த அழைப்பாணையையும் அவர் நிராகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்யும் நிலைமை இருப்பதாகவும், அவ்வாறு நடந்தால் ஆட்சி கலைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது போன்ற பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்ததாலும் இந்நடவடிக்கையை அவர் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இது போன்ற குழப்பங்களைத் தவிர்த்து, தங்களின் வலிமையையும் வெளிப்படுத்த அரவிந்த் கேஜ்ரிவால் தயாராகிவிட்டார் என்பது அவருடைய ட்விட்டர் பதிவின்மூலம் உறுதியாகிறது. தில்லி அரசியல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

logo
Kizhakku News
kizhakkunews.in