லாரியும், பேருந்தும் மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேல்மருவத்தூர் அருகே சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பேருந்து மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர்.
இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒரு மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
5-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘படியில் பயணம், நொடியில் மரணம்’ என்ற வாசகத்தை உணர்ந்து, இனியாவது பேருந்தின் படிக்கட்டுகளில் யாரும் பயணிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.