பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார காரை பரிசாக வழங்கியுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
அஜர்பைஜான் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை செஸ் இறுதிச்சுற்றில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடி பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தாவுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார காரை பரிசாக அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் சொன்னதை நிறைவேற்றும் வகையில் புதிய எக்ஸ்யுவி 400 மின்சார காரின் சாவி பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்று வழங்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்களை பிரக்ஞானந்தா தனது X தளத்தில் பதிவிட்டு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.