
தீனா பட வாய்ப்பு தனக்கு திருப்புமுனையாக அமைந்ததாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது:
தீனா படம் வெளியாகும் வரை, நான் ஒரு துரதிர்ஷ்டவசமான இசையமைப்பாளர் என்று முத்திரை பதித்தார்கள். தீனா படத்துக்குப் பிறகுதான் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதற்கு முன்பு நான் இசையமைக்கும் படங்கள் வெற்றி பெறுவதில்லை என்பார்கள். இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தது. ஆனால், நிச்சயம் ஒரு திருப்புமுனை அமையும் என்று எனக்கு தெரியும்.
அப்போதுதான் அஜித் எனது வீட்டிற்கு வந்து, தீனா படத்துக்கு என்னை இசையமைக்கச் சொன்னார். என்னை சந்தித்த அவர், “உங்களுக்கு ஒரு படத்தை கொடுக்கிறேன், அதனை சிறப்பாக செய்ய வேண்டும்” என்றார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்குப் பிறகு, அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பூவெல்லாம் கேட்டுப்பார் வெற்றி படமாக அமையவில்லை, ஆனால் அதன் பிறகு தீனா மற்றும் துள்ளுவதோ இளமை போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தது. அதுவே எனக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.