
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கடந்த 2002-ல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. தீரஜ் சர்ணா இயக்கிய இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா போன்றோர் நடித்தனர்.
இப்படம் கடந்த நவம்பர் 15 அன்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டினார்.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியைப் படக்குழுவினருடன் இணைந்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத், இப்படத்தை பாராட்டியுள்ளார். மேலும், ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.