2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஷால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாகவும், இனி மக்களை ஏமாற்ற முடியாது எனவும் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“செல்லமே படம் வந்த சமயத்தில் சில திரையரங்குகள் இருந்தன. பூஜை படம் வரும்போது மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வந்தன. இன்று ஒரு பெரிய திரையரங்குக்கு சென்றால் அங்கு 6,7 படங்கள் இருக்கும். அதில் எதற்கு வேண்டுமோ மக்கள் செல்கிறார்கள்.
கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் ஓடிடியில் அனைத்து விதமான படங்களையும் பார்த்துவிட்டார்கள். இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது. காப்பி அடித்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்.
அதேபோல, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலும் பெரிதாக இருக்கும். அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். அதில் என் பெயரும் இருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்” என்றார்.