வடிவேலு வெற்றிக்கு நான்தான் காரணம்: சிங்கமுத்து தரப்பில் பதில்

இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
வடிவேலு வெற்றிக்கு நான்தான் காரணம்: சிங்கமுத்து தரப்பில் பதில்
1 min read

ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கில், சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி ரூ. 5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சிங்கமுத்து பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்கை வடிவேலு தாக்கல் செய்துள்ளார். வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் இருந்தேன். நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரைப் பற்றி பேட்டி அளிக்க தடை கோர எந்த உரிமையும் அவருக்கு இல்லை. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அக். 24-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in