வாழை படத்தை ஆபாசப் படம் என்று பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா குறிப்பிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியான படம் வாழை. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தன்னுடைய வலைத்தளத்தில் அவர் எழுதியதாவது:
“வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோ காட்சிகளின் சாஃப்ட் வெர்ஷன் ஆகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நேரடியாக நடக்கும். இங்கே மறைமுகமாக நடக்கிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதான பாசாங்குதான் இந்தப் படத்தை சமூக விரோதமான படைப்பாக மாற்றுகிறது.
டீச்சரும் சிவனைந்தனும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. என்னைப் போல் அது புரியாத அசடுகளுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெள்ளத் தெளிவாக தன் இசையின் மூலம் அந்தப் பாலியல் சமிக்ஞைகளைப் புரிய வைத்து விடுகிறார். இயக்குனர் சூசகமாகச் சொல்ல நினைப்பதை இசையமைப்பாளர் நம் கண் முன்னே தூலமாக எடுத்துக் காண்பித்து விடுகிறார். நம் செவிகள் கேட்பதை கண்கள் புரிந்து கொள்கின்றன.
அந்த வகையில் வாழையை நான் ஒரு ஆபாசப் படம் என்றே சொல்லுவேன். ஜப்பானிய இயக்குனர் Nagisa Oshima எதை நீங்கள் மறைக்கிறீர்களோ அதுதான் ஆபாசம், எது இருக்கிறதோ அதைக் காண்பிப்பது ஆபாசம் அல்ல என்கிறார். அவருடைய In the Realm of the Senses அதற்கு ஒரு உதாரணம். மாரி செல்வராஜ் அந்தப் படத்தைப் பார்க்கலாம்.
ஆனால் நிஜத்தைச் சொன்னால் படம் ஊற்றிக்கொண்டு விடும். தமிழ் மகாஜனங்களுக்கு நிஜம் பிடிக்காது. ஆபாசப் படம் என்று கழுவி ஊற்றி டின் கட்டி விடுவார்கள். மாரி செல்வராஜ் இப்படி கோடி கோடியாகக் கல்லா கட்டியிருக்க முடியாது. ஏன், போட்ட பணத்தையே எடுத்திருக்க முடியாது. அதனால்தான் பொய் சொல்லி, பாசாங்கு செய்கிறார். வாழை வெளிவந்த உடனேயே பார்த்தேன். ஆனால் அது பற்றி எழுதவில்லை. எழுதினால் அதன் வெற்றி பாதிக்கப்படும், கோடிகள் செலவழித்து எடுத்த படத்துக்கு என்னால் பாதிப்பு வரக் கூடாது என்றே எழுதவில்லை”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரு நிவேதிதாவின் வாழை பட விமர்சனம்