
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழ் திரையுலகில் தனது இசையால் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1976-ல் அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இளையராஜா 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். லண்டனில் சிம்பெனியை இசைத்து உலகப் புகழும் பெற்றவராகத் திகழ்கிறார். அவரது 50 ஆண்டு கால திரைப் பயணத்தையும், லண்டனில் சிம்பெனி இசைத்த சாதனையையும் பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் அவருக்கு இன்று (செப். 13) பாராட்டு விழா நடக்கிறது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், மாலை 5:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. இவ்விழாவின் தொடக்கத்தில் இளையராஜா இசைக்கச்சேரி நிகழ்த்துகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்க உள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர். திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ilaiyaraja | M.K. Stalin | TN CM | Symphony | Maestro Ilaiyaraja | Rajinikanth | Kamal Hassan |