ஒதுங்கி இருக்கிறேன், விரைவில் குணமடைவேன்: நஸ்ரியா அறிக்கை

திடீரென காணாமல் போனதற்காக என் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க...
ஒதுங்கி இருக்கிறேன், விரைவில் குணமடைவேன்: நஸ்ரியா அறிக்கை
படம்: https://www.instagram.com/nazriyafahadh
1 min read

திரைத் துறையிலிருந்து ஒதுங்கி இருக்கும் நஸ்ரியா நஸீம், மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும் இதிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது அறிக்கையில் நஸ்ரியா நஸீம் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த சில மாதங்களாக மனநலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக சற்று தடுமாறி வருகிறேன். இதனால், என்னால் வெளிப்படையாக இயங்க முடியவில்லை.

30-வது பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம், சூக்‌ஷமதர்ஷினி படத்தின் வெற்றி உள்பட பல்வேறு முக்கிய தருணங்களைக் கொண்டாடுவதைத் தவறவிட்டேன். நான் ஏன் ஒதுங்கிக் கொண்டேன் என்பதற்கான காரணத்தை விளக்காமல், அழைப்புகளை ஏற்காமல், குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்காமல் இருந்ததற்கு நண்பர்கள் உள்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது வேதனை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் முற்றிலுமாக தனிமைப்படுத்திக்கொண்டேன்.

பணி சார்ந்து என்னை அணுக முயற்சித்த சக கலைஞர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர விரும்புகிறேன். இதனால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது. சிறந்த நடிகைக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதை வென்றுள்ளேன். சக போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கும் அனைத்து அங்கீகாரத்துக்கும் நன்றி.

இது மிகக் கடினமான பயணம். ஆனால், இதிலிருந்து நாளுக்கு நாள் குணமடைந்து தேறி வருகிறேன். இந்தக் கடினமான நேரத்தில் உங்களுடையப் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி. முழுமையாகக் குணமடைய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், மீண்டு வருகிறேன் என்பதற்கான உறுதியை அளிக்கிறேன்.

இப்படி திடீரென காணாமல் போனதற்காக என் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதால் இதை எழுதுகிறேன்" என்று நஸ்ரியா நஸீம் குறிப்பிட்டுள்ளார்.

நஸ்ரியா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சூக்‌ஷமதர்ஷினி. கடந்த டிசம்பரில் தனது சகோதரர் திருமண நிச்சயத்தில் கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மேடையில் தோன்றினார். இதன்பிறகு, வெளியில் தலையைக் காட்டாமல் இருக்கிறார் நஸ்ரியா.

நஸ்ரியாவின் இந்தப் பதிவுக்குக் கீழே அனா பென், டொவினோ தாமஸ், காயத்ரி ஷங்கர், ரம்யா சுப்ரமணியன், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, சமந்தா, கீர்த்தி பாண்டியன், விஜய் வர்மா, மஞ்சிமா மோகன், சௌபின் உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in