
எல்ஐசி படத் தலைப்பு விவகாரம் தொடர்பாக விக்னேஷ் சிவனை விமர்சித்து இயக்குநர் எஸ்எஸ் குமரன் நயன்தாராவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
"நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல்" ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த படத் தயாரிப்பாளர் தனுஷ் ஒப்புதல் தரவில்லை. மேலும், ஆவணப் படத்தின் டிரெய்லரில், நானும் ரௌடிதான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டதாகவும் நயன்தாரா குற்றம்சாட்டி விமர்சித்துள்ளார். இதில் தனுஷின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என நயன்தாரா கூறியுள்ளார்.
இந்த நிலையில், நயன்தாராவுக்கு இயக்குநர் எஸ்எஸ் குமரன் வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளார்.
"திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம்.
மூன்று விநாடிக் காட்சிக்காக நஷ்டஈடு கேட்டு தனுஷ் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்ததற்காக வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு எல்ஐசி என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.
எல்ஐசி என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்துக்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.
என் கதைக்கும் அந்தத் தலைப்புக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் எல்ஐசி என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்துக்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாக இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.
உங்களைவிட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்துகொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.
இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.
என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.
எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகத்துக்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க" என்று தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படத்துக்கு எல்ஐசி எனப் பெயர் சூட்டப்பட்டது. எல்ஐசி என்ற பெயரை, தான் 2015-ல் பதிவு செய்ததாக இயக்குநர் எஸ்எஸ் குமரன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னையை இயக்குநர் எஸ்எஸ் குமரன் ஏற்கெனவே கடந்த டிசம்பரிலும் எழுப்பியிருந்தார்.
இதனிடையே, விக்னேஷ் சிவன் இயக்கிய வந்த படத்துக்கு எல்ஐசி என்பதற்குப் பதில் எல்ஐகே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.