நடிகர்கள் சூரி - விஷ்ணு விஷாலின் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
சூரியும், விஷ்ணு விஷாலும் ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘ஜீவா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஆரம்பம் முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பண பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது.
படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கிக்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாகக் கூறி விஷ்ணு விஷாலின் தந்தை பண மோசடி செய்ததாக சூரி புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சூரி, விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் நீண்டகாலமாக பேசிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக விஷ்ணு விஷால், “இருவருக்கும் இடையே 3-வது நபர் வந்ததால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது. தற்போது இருவரும் மனதளவில் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், தனது தந்தை மற்றும் சூரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து, "காலம் எல்லாவற்றுக்கும் எல்லோருக்குமான பதில்” என்றார்.
இதற்கு பதிலளித்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என்றார். இதன் மூலம் நடிகர்கள் சூரி - விஷ்ணு விஷாலின் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.