
மலையாள நடிகர் ஷைம் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹைபிரிட் கஞ்சா கடத்தில் வழக்கில் 43 வயது தஸ்லிமா சுல்தானா என்பவர் ஏப்ரல் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். ஆலப்புழாவிலுள்ள ரெசார்ட் ஒன்றில் இவர் மற்றும் இவருடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டபோது ஹைபிரிட் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவருடன் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இவர் திரைத் துறையினருக்கு ஹைபிரிட் கஞ்சாவை விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. இவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீநாத் பாஸி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் மாடல் கே சௌமியா ஆகியோருக்கு ஆலப்புழாவிலுள்ள கலால் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் மூவரும் திங்கள்கிழமை ஆலப்புழாவில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு ஸ்ரீநாத் பாஸி மற்றும் சௌமியா ஆகியோர் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
10.30 மணி நேர விசாரணையில் போதைப் பொருள் அடிமையால் சிரமப்பட்டு வருவதாகவும் இதிலிருந்து விடுபட உதவி தேவை எனவும் ஷைன் டாம் சாக்கோ கூறியதாகத் தெரிகிறது. இதன்படி, விசாரணையைத் தொடர்ந்து போதைப் பொருள் மறுவாழ்வு மையத்துக்கு ஷைன் டாம் சாக்கோ மாற்றப்பட்டார்.
இதனிடையே, இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்சாவிடமிருந்து கொச்சியில் ஹைபிரிட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது. இதுதொடர்புடைய விசாரணைக்காக கலால் துறை பிரத்யேகமாக ஒரு குழுவை அமைத்துள்ளது.