
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது பெண் கலைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் அண்மையில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். 2025-ல் சூத்ரவாக்கியம் படப்பிடிப்புத் தளத்தில் திரைக் கலைஞர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் கலைஞர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். இதில் நடிகரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இந்தக் காணொளியைத் தொடர்ந்து, ஷைன் டாம் சாக்கோ பெயரைக் குறிப்பிட்டு, மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம், கேரள திரைப்படச் சபை, படத்தின் புகார் பிரிவு ஆகிய இடங்களில் அவர் புகார் அளித்துள்ளார்.
அதேசமயம், மற்றொரு சர்ச்சையிலும் ஷைன் டாம் சாக்கோ சிக்கியுள்ளார். கொச்சியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சோதனை நடத்திய தனியார் விடுதி ஒன்றிலிருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பியோடும் காணொளி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதுவும் கேரளத்தில் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, கொச்சியில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக 2015-ல் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு தான் ஷைன் டாம் சாக்கோ விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்தக் காணொளி வெளியாகியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை தரப்பில் ஷைன் டாம் சாக்கோவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.