
ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவுள்ள நிலையில், ஷாலினி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அஜித் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா அண்மையில் தெரிவித்தார்.
இது குறித்த தனது எக்ஸ் தள பதிவில், “அஜித் குமார் ரேஸிங் என்கிற புதிய அணியைத் தொடங்கியதை பெருமையுடன் அறிவிக்கிறோம். ஃபேபியன் என்பவர் இந்த அணியின் அதிகாரபூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார்.
இந்த அணியின் உரிமையாளர் என்பதை கடந்து, அஜித் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்பார். சர்வதேச அளவிலும், எஃப்ஐஏ சாம்பியன்ஷிப் பந்தயத்திலும் கலந்துகொள்ளும் சில இந்தியர்களில், அஜித்தும் ஒருவர்.
ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும்.
ஏற்கெனவே, 2004-ல் நடைபெற்ற ஃபார்முலா ஆசிய பிஎம்டபிள்யூ எஃப்3 சாம்பியன்ஷிப் மற்றும், 2010-ல் நடைபெற்ற ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகளில் அஜித் பங்கேற்றார்.
திறமையான இளம் வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதே எங்கள் நோக்கம் ஆகும்” என்று சுரேஷ் சந்திரா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள அஜித்துக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், “கார் பந்தயத்தில் நீங்கள் மீண்டும் களமிறங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கும் உங்கள் அணிக்கும் வாழ்த்துகள்” என்று ஷாலினி தெரிவித்துள்ளார்.