

திருத்தணி அருகே புலம்பெயர்ந்த தொழிலாளரைச் சிறுவர்கள் தாக்கிய விவகாரம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த திருத்தணி அருகே சுராஜ் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி மீது சிறுவர்கள் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து அதில் தொடர்புடைய சிறுவர்கள் நான்கு பேரைக் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. காயமடைந்தவர் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் உருக்கம்
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“சென்னையில், குறிப்பாக இரவில் போதைப் பழக்கம் அதிகமாக உள்ளவர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நான் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது ஸ்டுடியோ தளத்தில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழில் செய்யும் நண்பர்கள் சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டுள்ளனர்.
இனவெறியர்கள் ஆதரிக்கிறார்கள்
இத்தகைய தாக்குதல் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் இனவெறு பிடித்தவர்களாகவும் பிற மாநிலத்தவர்கள் மீது வெறுப்பையும் தாக்குதலையும் காட்டுபவர்களாக உள்ளனர். அவர்களைப் பெரும்பாலும் உள்ளூர் அரசியல்வாதிகளும் சாதி அடிப்படையிலான குழுக்களும் ஆதரிக்கிறார்கள். அதனால்தான் இத்தகைய இளம் சிறுவர்கள் அதை நம்பி மற்றவர்கள் வாழ்க்கையையும் தங்களையும் அழித்துக் கொள்கிறார்கள்.
மங்கும் வேற்றுமைக் கோடுகள்!
இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நாம், இன்னும் யதார்த்தமாகச் செயல்பட்டு பாதிக்கப்படும் பலரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுவல்லவா? திரையில் பெரிதுபடுத்திக் காட்டப்படும் வன்முறைக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணராமல், அதன் வேற்றுமைக் கோடுகள் மங்கத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இதுவே நாம் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் என்பதைக் குறிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Music director Santhosh Narayanan has posted his concerns regarding the attack on migrant worker near Thiruttani.