
இலக்கியத்திலும் சினிமாக்களிலும் The Chosen one எனும் ஒரு வகையைச் சேர்ந்த கதைகள் உண்டு. இந்தக் கதைகளுக்கு என்றே ஓர் இலக்கணம் உண்டு. இந்த Chosen One-ன் இலக்கணப்படி உலகமோ, தேசமோ அல்லது குறிப்பிட்ட இன மக்களோ துன்பத்தில் இருக்கும்போது அவர்களைக் காப்பாற்ற ஒருவன் பிறந்து வருகிறான் என்பதே இதன் இலக்கணம்.
அந்த ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன்’ எனும் கதாபாத்திரம் பண்டையப் புராணங்களில் இருந்து இப்போது உள்ள நவீனப் புனைவு வரை தொடர்கிறது. உதாரணம் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் மோஸஸ் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். எகிப்தில் அடிமை வாழ்க்கை வாழும் யூதர்களைக் காப்பாற்றி தாய் தேசம் அழைத்துப் போக வந்தவர் என்பது அவர்களது புனைவு. நவீனக் காலத்தில் சொல்லவேண்டும் என்றால் ஹாரி பாட்டர் கதையில் வரும் ஹாரி, தீய சக்தியை அழிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன். கேம் ஆப் த்ரோன்ஸ் நிகழ்ச்சியில், மனிதர்களை அழிக்க வரும் வெள்ளை நடைபிணங்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற ஓர் இளவரசன் வருவான் என்று அவ்வபோது கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதை அந்தத் தொடரைப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
இப்படித் ’தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனுக்கு’ என்று சில வரையறைகள் உண்டு. உலகைக் காப்பாற்ற விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுக்கு அதற்கான எந்தத் தகுதியுமே முதலில் இருக்காது. கோழையாக இருப்பான், பொறுப்புகள் இல்லாமல் இருப்பான். சில சமயம் யாரைக் காப்பாற்ற விதிக்கப்பட்டானோ அவர்களுக்கு எதிராகவோ செயல்பட்டுக்கொண்டிருப்பான். அவனுக்குள் நிறைய உள்முரண்பாடுகள் இருக்கும்.
மோஸஸ் ஒரு பயந்தாங்கொளி. அவதார்: தி லாஸ்ட் ஏர் பெண்டரில் வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன், பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன். இப்படி அவதார புருஷர்களுக்கான எந்த அம்சமும் இல்லாதவர்கள் அதற்கான பொறுப்புகளை, திறமைகளை, தகுதிகளை வளர்த்துக்கொண்டு இறுதியாகத் தனக்கு விதிக்கப்பட்ட செயலை செய்து முடித்து உலகை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்தக் கதைகளின் நோக்கமாக இருக்கும்.
இதே வகையைச் சேர்ந்ததுதான் தமிழில் தற்போது வெளியாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம்.
தூத்துக்குடியில் வாழும் ரெளடி. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் குழந்தைகள் கிடையாது. அப்போது கிருஷ்ண ஜெயந்தி அன்று கிடைத்த அனாதைக் குழந்தை பாரியை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை ஆக்ரோஷமாக இருக்கிறது. எப்போதும் கோபத்திலேயே இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு சிரிப்பு என்றாலே தெரியவில்லை. சிரிப்பே வரவில்லை. தன்னிடம் இருக்கும் கோபத்தையும் வன்முறையையும் பயன்படுத்தி மிகச்சிறந்த ரெளடியாகி எல்லாவற்றையும் அடித்துத் துவைக்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் கதாநாயகியாக வரும் ருக்மணியை (பூஜா ஹெக்டே) சந்திக்க நேர்கிறது. காதல் மலர்கிறது. ரெளடித்தனம், கட்டப் பஞ்சாயத்து என எல்லாவற்றையும் விட்டுவிட்டு இனி திருந்தி வாழப்போகிறேன், சிரிக்கப் பழகுகிறேன் எனச் சொல்லிவிட்டு வருகிறான். ஆனால் அவனது திருமணத்தின் அன்றே மீண்டும் பெரிய பிரச்னை வெடிக்கிறது. விட்டு வந்த வன்முறைப் பாதைக்கே திரும்ப நேர்கிறது. பிறகு கதாநாயகன் என்ன செய்தான், வன்முறையைக் கைவிட்டானா, காதலியைக் கரம் பிடித்தானா, இறுதியில் சிரித்தானா என்பதுதான் படத்தின் சுருக்கமான கதை.
இதே கதையை வைத்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. சமீபத்தில் தமிழிலில் வெளியான வீர தீர சூரன், குட் பேட் அக்லிகூட இதே கதையம்சத்தைக் கொண்டவைதான். ஆனால் இந்தப் படம் மற்ற படங்களைவிட எங்கு மாறுபடுகிறது என்றால் எடுத்துக்கொண்ட கருப்பொருள்.
எந்த ஒரு நல்ல படத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடிநாதமாக ஒரு விவாதம் இருக்கும். ஆங்கிலத்தில் Moral Debate என்பார்கள். தமிழில் தத்துவ விசாரணை என்று சொல்லலாம்.
தத்துவ விசாரணை என்பது உலகைப் பற்றிய ஒரு பார்வை. எது சரி, எது தவறு என்ற பார்வை. உதாரணமாகப் பழைய படங்களில் காதலா, குடும்பமா என்று ஒரு விவாதம் இருக்கும். இறுதியில் கதையின் நாயகனும் நாயகியும் காதலைத் தேர்வு செய்கிறார்களா, இல்லை குடும்பமே முக்கியம் என்று பிரிகிறார்களா என்பது ஒரு விவாதம். அதுதான் படத்தின் கருப்பொருள். இதில் எந்தப் பதில் சரி என்பது முக்கியமில்லை. அது ஒவ்வொரு இயக்குநரின் பார்வையைப் பொறுத்தது. ஆனால் விவாதம் முக்கியம். அதுதான் படத்தின் மையம்.
மற்றொரு உதாரணமாக நண்பன் படத்தை எடுத்துக்கொள்ளலாம். நண்பன் படத்தில் எது கல்வி, எது வெற்றி என்பது பற்றி மாற்றுப் பார்வைகள் இருக்கும். இளைஞர்கள் என்றாலே பொறியியல் படித்து, நல்ல மதிப்பெண் எடுத்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல வேலை வாங்கினால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது சத்யராஜ் கதாபாத்திரத்தின் பார்வை. விஜய்யின் பார்வை இதற்கு வேறாக இருக்கும். நமக்குப் பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் உழைத்தாலே வெற்றி தானாக நம்மை தேடி வரும் என்பது விஜய் கதாபாத்திரத்தின் பார்வை. இதில் எது சரியானது என்பதைச் சரியான காட்சிகள் அமைத்து விவாதித்து இறுதியில் தெரிவித்திருப்பார்கள். விஜய்யின் பார்வைதான் சரி என சத்யராஜ் ஒப்புக்கொண்டு பேனாவைப் பரிசளிப்பார். அதற்கேற்ற வகையில் கோர்வையாகக் காட்சிகள் அமைந்திருக்கும். அதுதான் அந்தப் அப்படத்தின் திரைக்கதையைச் சுவாரசியப்படுத்தும்.
அதேபோல இந்தத் தத்துவ விசாரணையில் இருந்துதான் வலுவான கதாபாத்திரங்களையும் உருவாக்க முடியும். நண்பனில் விஜயும் சத்யராஜும் எதிரெதிர் துருவங்கள். ஒரு கதாபாத்திரத்திற்குக் கல்வி பற்றிய குறிப்பிட்ட ஒரு பார்வை இருக்கிறது என்றால், அதற்கு எதிரான பார்வையும் தானாக வந்துவிடும் இல்லையா? இது மற்றொரு கதாபாத்திரம். அந்தப் பார்வையில் உள்ள சிறுசிறு முரண்பாடுகளாக விஜயின் நண்பர்களாக வரும் ஸ்ரீகாந்த், ஜீவா கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதுதான் கதாபாத்திர உருவாக்கத்தின் அடிப்படை.
எந்த ஒரு நல்ல படமும் இப்படியொரு தத்துவ விசாரணையைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான கதாபாத்திரங்களைக் கொண்டிருக்க வேண்டும். ரெட்ரோ படத்திலும் இத்தகைய தத்துவ விசாரணை உண்டு. கதாபாத்திரங்கள் உண்டு. ஆனால் அந்தக் கதாபாத்திரங்களை வைத்து சரியான காட்சிகளை அமைக்கவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் பிரச்னை.
ரெட்ரோ முன்வைக்கும் கேள்வி.
மனிதச் சமூகத்துக்கு வன்முறை அவசியமா? இதுதான் படம் முன்வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான வெவ்வேறு பார்வைகளாக பாரி, ருக்மணி, வில்லனாக வரும் மைக்கேல் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.
பாரிக்குப் பிறந்ததில் இருந்தே கோபம், வன்முறைதான் பிடிக்கிறது. மனிதர்களைக் கொல்வதை விருப்பப்பட்டே செய்கிறான். ஆனால் அது சரியா என்கிற முதல் கேள்வி ருக்மணியிடம் இருந்து வருகிறது. ருக்மணியைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு அகிம்சைதான் தேவை. புத்தர் வழிகாட்டியபடி அமைதியே மனித வாழ்வை வழிநடத்தும் தர்மம். இது இன்னொரு பார்வை. மூன்றாவதாக ஒரு கதாபாத்திரம் உண்டு. மைக்கேல் எனும் பெயரில் வரும் வில்லன் கதாபாத்திரம், மனிதப் பரிணாம வளர்ச்சியிலேயே வன்முறை எனும் பண்பு வளர்ந்து வந்துள்ளது. வன்முறை இல்லாமல் மனித நாகரிகம் இயங்காது. இதனால் உயிர்களைக் கொல்வது தவறே கிடையாது என ஒரு பார்வையை முன்வைக்கிறது. இப்படி மூன்று பார்வைகளையும் மோதவிட்டு பதிலைக் கண்டடைவதைத்தான் இந்தப் படம் செய்ய முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அதைச் சரியாக செய்யாமல் விட்டதுதான் இந்தப் படத்தின் குறை.
இறுதியில் ரெட்ரோ படம் கண்டடையும் உண்மை என்ன?
வன்முறை தேவைதான். ஆனால் அதைச் சக மனிதர்கள் மேல் பயன்படுத்தாமல் தீய சக்திக்கு, சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்திற்குப் பயன்படுத்தலாம். இதுவே தர்மம் என்கிறது இந்தப் படம்.
இதை இரண்டு வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
முதலாவதாக, ‘புத்தருக்கு வேண்டுமானால் அகிம்சை தர்மமாக இருக்கலாம். ஆனால் பாரி - கிருஷ்ணன். போர் செய்து தீய சக்தியை அழிப்பதுதான் கிருஷ்ணனின் தர்மம்’ என்று ஒரு கதாபாத்திரம், ருக்மணியிடம் சொல்லும். இதுதான் விடை. இதை உறுதி செய்யும் பதிலையும் இறுதியில் பாரியே சொல்வான். ’இத்தனை நாள்கள் கோபத்தை, வன்முறையை விட்டொழிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. இப்போது தீயவர்களை அழித்தவுடன் கோபம் என்னை விட்டு விலகிவிட்டது. இனிமேல் நானே நினைத்தாலும் கோபம் கொள்ள முடியாது’ என்கிறான்.
இப்படியாகப் படம் அது எடுத்துக்கொண்ட விவாதத்திற்கான பதிலைக் கண்டடைந்துவிட்ட்து. ஆனால் அது சரியான கேள்விகளை எழுப்பி இந்தப் பதிலுக்கு வந்ததடைந்ததா? சர்வநிச்சயமாக இல்லை.
என்ன செய்திருக்கலாம்?
படத்தில் வரும் எந்தக் காட்சிகளும் பாரிக்கு எதிராக இருக்கும் இரண்டு பார்வைகளையும் பரிசீலித்துப் பார்க்கவில்லை. பாரிக்கு வன்முறை பிடித்தாலும் காதலியுடனான வாழ்வுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்பதால் முதலில் அதைத் தொலைக்க விரும்புகிறான். சரி. ஆனால் அதை உண்மையிலேயே முயற்சி செய்கிறானா? அதற்கான காட்சிகள் இருக்கிறதா? இல்லை.
அந்தமானுக்குச் சிரிப்பு டாக்டராக செல்லும் பாரி, அங்கு வன்முறையை விட்டொழித்தவனைப் போல நடிக்கிறான். அப்படியில்லாமல் உண்மையிலேயே வன்முறையற்றவனாக இருக்க முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் அங்குச் சந்திக்கும் பிரச்னைகளால் ஒருகட்டத்தில் வன்முறையற்ற பாதை பயனளிக்காது என்று உணர்ந்து, பின் அதைவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இப்படியாக ருக்மணி வைக்கும் வாதம் சரியில்லை என பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும்.
ஆனால் படத்தில் பாரி என்ன செய்கிறான்? கொஞ்ச நேரம் நடித்துவிட்டு நாயகிக்கு உண்மை தெரிந்தவுடன், தனக்கு இந்த அகிம்சை சரிவராது என்று சொல்லிவிட்டு வில்லனுடன் சேர்ந்துவிடுகிறான். படம் வில்லன் முன்வைக்கும் பார்வையை விவாதிக்கச் சென்றுவிடுகிறது.
சரி, அதையாவது சரியாகச் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை.
வில்லன் மைக்கேல் வைக்கும் பார்வை, வன்முறை என்பது மனிதனின் இயல்பு. இதனால் கொலைகூட தப்பில்லை என்பது. இதை உறுதிப்படுத்தும் காட்சிகள்தான் கிளேடியட்டர் போன்ற களத்தில் எல்லோரையும் மோதவிட்டுக் கொல்லச் சொல்வது. பாரியும் அங்குச் சேர்ந்துவிடுகிறான். ஆனால் அங்கு நிலவும் கட்டற்ற வன்முறையும் சரியா என்கிற கேள்வியும் அவனுக்குள் எழ வேண்டும். அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை.
பாரி வில்லனுடன் அவனது இடத்திற்குச் சென்றவுடன் இரக்கமே இல்லாமல் சண்டையிட்டுக் எல்லோரையும் கொல்கிறான் இல்லையா? இதிலும் அவனுக்கு மனநிறைவு இருக்கக்கூடாது. அப்பாவிகளைக் கொல்வதாக அவன் உணர வேண்டும். அவனது பிரச்னைகளுக்கு இதுவும் தீர்வில்லை என்று ஒருகட்டத்தில் தோன்ற வேண்டும்.
வன்முறை கூடாது என்பதும் சரி இல்லை, கட்டற்ற வன்முறையும் சரி இல்லை என்றால் பிறகு எதுதான் சரி என்கிற கேள்வி அவனுக்குள் வர வேண்டும். அப்போதுதான் மூன்றாவதாக ஒரு பார்வை இருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதற்குதான் வன்முறை என்கிற பதில் அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
இப்படி யோசித்துப் பாருங்கள். வில்லனிடம் சேர்ந்து அவனுக்காகச் சண்டையிடும் பாரிக்கு ஒருகட்டத்தில் கட்டற்ற கொலைகள் சரி இல்லை என்று தோன்றிவிடுகிறது. வில்லனுடன் மோதல் வந்துவிடுகிறது. இப்போது வில்லனுடைய ஆள்கள் இரண்டு பேரைக் கோபத்தில் அடித்துவிடுகிறான். இப்போது அங்கு அடிமையாக இருக்கும் மக்கள் பாரியின் செயலைப் பார்த்து கொண்டாடியிருந்தால் என்னவாகியிருக்கும்? அப்போதுதான் அவனுக்கு வன்முறை குறித்த புதிய புரிதல் தோன்றி இருக்கும்.
ஏன் மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள்? தான் இத்தனை நாள்கள் வன்முறை பயன்படுத்துவதைக் கண்டு மக்கள் அலறினார்கள். இப்போது முதல்முதலில் கொண்டாடுகிறார்கள் என்றால் எதற்காக? நான் சர்வாதிகாரிகளின் ஆள்களை அடித்தேன் என்பதற்காகவா? அப்போது சர்வாதிகாரத்திற்கு எதிராக வன்முறையை பயன்படுத்துவதுதான் சரியான விடையாக இருக்குமோ? இப்போது எனக்குள் ஒரு நிம்மதி நிலவுகிறதே? அப்படியென்றால் தனக்குள் வன்முறை தொடர்ந்து துளிர்விட்டுக் கொண்டே இருந்ததற்கான காரணம், அதனை அப்பாவி மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவா?
இப்படியான கேள்விகள் எழுந்திருக்கும். இப்போது பாரிக்குப் பதில் தெரிந்திருக்கும். வன்முறை இல்லாமல் இருப்பதும் தவறு, கட்டற்ற வன்முறையும் தவறு, வன்முறை வேண்டும். அதனைப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக எதிரிகளிடம் பயன்படுத்த வேண்டும். இதுதான் கிருஷ்ணனின் போர் தர்மம்.
இதுதான் படம் கேட்க விரும்பிய கேள்விகளுக்கான பதில்.
இதன்பின் பாரிதான் மக்களைக் காப்பாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் என்கிற உண்மை தெரிந்திருந்தால் இன்னும் எத்தனை முழுமையாக இந்தத் திரைக்கதை இருந்திருக்கும்?
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன், தன்னுடைய குறைகளை விலக்கி, தன் தகுதியை வளர்த்துக்கொண்டு வில்லன் கும்பலை அழித்து, தனக்குள் இருந்த வன்முறையில் இருந்து விடுதலையடைந்து, மன அமைதியை அடைந்து சிரிக்கிறான் என்று படம் முடியும் அல்லவா?
இயக்குநர் நினைத்தது இதைத்தான். ஆனால் அதற்கான காட்சிகளை அவர் சரியாக உருவாக்கவில்லை. இதுதான் படத்தை அந்நியமாக்கி இருக்கிறது.
படத்தில் வேறு பிரச்னைகள் இருந்தாலும் முக்கியமாக இந்தப் பிரச்னையை சரி செய்திருந்தால் ஜிகர்தண்டா போன்று ஒரு நல்ல திருப்தியான படம் அமைந்திருக்கும். மகானில் செய்ய நினைத்துச் சொதப்பிய அதே விஷயத்தைத்தான் ரெட்ரோவிலும் கார்த்திக் சுப்புராஜ் செய்திருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் படங்களில் ஒரு சமூகப் பிரச்னையைப் பற்றி பேச வேண்டும் என்கிற நல்ல எண்ணம் இருக்கிறது. ஆனால் அதை சரியான காட்சிகள் மூலம் அவர் பேச முயலவேண்டும்.