
‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட இயக்குநரும், பாடலாசிரியருமான ரவி ஷங்கர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 63.
வார இதழில் சிறுகதைகள் எழுதி அதன் பிறகு திரைத் துறைக்கு நுழைந்தவர் ரவி ஷங்கர்.
இவர் கடந்த 2002-ல் மனோஜ் பாரதிராஜா, குணால் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தை இயக்கினார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா’ பாடல் உட்பட அனைத்துப் பாடல்களையும் ரவி ஷங்கர் தான் எழுதியிருந்தார்.
மேலும், ‘சூர்யவம்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடலையும் ரவி ஷங்கரே எழுதினார்.
வருஷமெல்லாம் வசந்தம் படத்துக்குப் பிறகு இவர் எந்த படமும் இயக்கவில்லை. திருமணமும் செய்து கொள்ளாமல் இருந்த இவர் சென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவி ஷங்கர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
(தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சுகாதாரத் துறையின் உதவி எண்ணை அழைக்கலாம் - 104)