ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.
தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் போன்ற பல படங்களை இயக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ்.
‘தர்பார்’ படத்துக்குப் பிறகு அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட்டார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்திற்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டது. ‘சிக்கந்தர்’ படம் 2025-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ளதாக ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, “அனைவரும் நீண்ட நாள்களாக எனது அடுத்த படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். சிக்கந்தர் படத்தில் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.