இது ரஜினி படமா, ஞானவேல் படமா? : வேட்டையன் விமர்சனம்

ரஜினிக்கு நிகராக படத்தில் அதிக விசில்களைச் சம்பாதிக்கும் கதாபாத்திரம் ஃபகத் ஃபாசிலுடையது.
இது ரஜினி படமா, ஞானவேல் படமா? : வேட்டையன் விமர்சனம்
2 min read

சென்னையில் ஒரு குற்றச் சம்பவம் நடக்கிறது. இதுதொடர்புடையக் குற்றவாளி தப்பியோடுகிறார். இவரைக் கண்டிபிடித்து வேட்டையாடுகிறார் (என்கவுன்ட்டர்) ரஜினி. குற்றச் சம்பவத்தின் பின்னணி என்ன, இதில் யாருடையத் தலையீடுகளெல்லாம் உள்ளது, காவல் துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டந்து உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதான் வேட்டையனின் கதை.

என்கவுன்ட்டர் நிபுணராக ரஜினி அதகளம் புரிய, என்கவுன்ட்டருக்கு எதிராக இளம் காவலர்களுக்கு கருத்தரங்கு நடத்துகிறார் அமிதாப் பச்சன். இதிலிருந்து தான் வேட்டையனின் கதை தொடங்குகிறது. படத்தில் பாடலுக்கு இடமில்லை என்பதால், ரசிகர்களுக்காக மட்டுமே வைக்கப்பட்டதுதான் மனசிலாயோ பாடல். இதன்பிறகு கதை வேகமெடுக்கிறது.

ரஜினி தொடக்க காட்சியிலிருந்தே மாஸ் காட்ட ஆரம்பித்து விடுகிறார். சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் நிறைய இடங்களில் ரஜினியை சண்டையிட வைத்திருக்கிறார் ஞானவேல். சண்டையில் மட்டுமில்லாமல், புத்திசாலித்தனத்திலும் ரஜினியைச் சிறப்பாகச் செயல்பட வைத்து, அவருக்கான மாஸ் தருணங்களையும் இந்தப் படத்தில் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். சில காட்சிகளில் வெறுமன ரஜினியின் தோற்றமும் நடையும் கொண்டாட்ட உணர்வைத் தூண்ட பல இடங்களில் இது உதவியிருக்கிறது. இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் மாஸ் தருணங்களைக் காட்சியாக்கும் விதத்தில் சற்று பின்னடைவு இருப்பதாகவே சில இடங்களில் தெரிகிறது.

அமிதாப் பச்சனுக்கு படத்தில் பெரிய பங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினி மாஸ் என்றால் இவர் கிளாஸாக ஸ்கோர் செய்வார் என்ற உணர்வு பட முன்னோட்டங்களில் இருந்திருக்கலாம். ஆனால், ஆசிரியரைப் போல வகுப்பெடுக்கும் பணி மட்டுமே அவருக்கு உள்ளது.

ரஜினிக்கு நிகராக படத்தில் அதிக விசில்களைச் சம்பாதிக்கும் கதாபாத்திரம் ஃபகத் ஃபாசிலுடையது. தமிழ்ப் படங்களில் இதுவரை இறுக்கமான எதிர்மறையான கதாபாத்திரமாகவே காண்பிக்கப்பட்டு வந்த அவரை, வேட்டையனில் சிக்ஸர் அடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். நிறைய சுவாரஸ்யம் சேர்க்கும் கதாராபத்திரமாக வடிவமைக்கப்பட்ட ஃபகத் ஃபாசிலின் 'பேட்டரி' வெற்றி கண்டுள்ளது. படத்தில் இவர் பேசிய வசனங்கள் மட்டுமே பெரிதளவில் ஈர்கக்கூடியதாக இருந்தது. மற்ற இடங்களில் வசனங்கள் சொதப்புகிறது. உதாரணம், படத்தில் முக்கியக் கதாபாத்திரம் உயிரிழந்துவிடும். ரஜினி அந்தக் கதாபாத்திரத்தைக் கட்டியணைத்து "என்னைவிட்டு போயிட்டியே" என்று உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

மற்றபடி துஷாரா, ரித்திகா, ராணா உள்ளிட்டோர் கதைக்குத் தேவையான அளவுக்கு உதவியிருக்கிறார்கள்.

வில்லன் கதாபாத்திரம் தான் நட்சத்திர நடிகர்களின் பட வெற்றியைத் தீர்மானிக்கும். இதில் ஜெயித்தால் நட்சத்திர நடிகர்கள் ஜெயிப்பார்கள். இவர்கள் ஜெயித்தால் படம் ஜெயிக்கும். வேட்டையன் இந்த இடத்தில் சறுக்கியுள்ளது. வெறுமென கார்ப்பரேட் வில்லன், பணபலம் படைத்தவன் என்ற கோணத்தில் மோலோட்டமாக எழுதப்பட்டுள்ளது ராணா கதாபாத்திரம். இவர் பெரிய புதிர் எதுவும் போடாததால், ரஜினிக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை.

படத்தில் பாடல் இல்லாதபோதிலும், பின்னணி இசையில் வழக்கம்போல அனிருத் அவரது பணியைச் சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக ரஜினி படம் என்றால் அனிருத் கூடுதல் உத்வேகம் அடைவதாகப் பேசப்படுவதுண்டு. வேட்டையனிலும் இதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார் அனிருத்.

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், படம் முழுக்க ரஜினி என்கவுன்ட்டர் செய்வதைக் கொண்டாட்ட மனநிலையில் காண்பித்து, பின்னணியில் ஹன்டர் வந்துட்டாருனு தெறிக்கவிட்டிருந்தாலும், இறுதியில் அதே ரஜினியைக் கொண்டு படத் தலைப்புக்கு நேர்மாறாகவும், என்கவுன்ட்டர் மனநிலைக்கு எதிராகவும் நிற்க வைத்து அவருடைய வசனத்தின் மூலம் காவல் துறையினர் வேட்டையாடுபவர்கள் (என்கவுன்ட்டர் செய்பவர்கள்) அல்ல, பாதுகாவலர்கள் எனச் சொல்ல வைத்தது பாராட்டுக்குரியது. குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் நிறைய என்கவுன்ட்டர்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்தக் கதை சமகாலத்தில் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரு படமாக எப்படி இருந்தது என்றால், உச்ச நட்சத்திரத்துக்கான ஒரு கமர்ஷியல் திரைக் கதையை உருவாக்கி அதனுள் தன் பாணியிலான கதையைப் பொருத்தி, ரஜினியை அதனுள் கொண்டு வந்து ஒரு கலவையான படமாக வேட்டையன் வந்துள்ளது. ரசிகர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய ரஜினிக்கு மாஸ் அம்சங்கள் இருந்தாலும், அது காட்சியாக மாறியதில் இன்னும் மெருகேற்றம் தேவையோ என்ற எண்ணம் எழலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in