
பைசன் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பைசன் படம் தமிழகத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், பைசன் படம் பார்த்துவிட்டு தொலைப்பேசியில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில்,
“சூப்பர் மாரி சூப்பர்! பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துகள் -சூப்பர் ஸ்டார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.