
மும்மொழி விவகாரத்தில் தமிழ்நாடு மீது விமர்சனம் வைத்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதில் தெரிவித்துள்ளார்.
ஹிந்திக்கு எதிரான நிலைப்பாடு உள்ள தமிழக அரசியல்வாதிகள், தமிழ்ப் படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட அனுமதிப்பது ஏன் என ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா காக்கிநாடா மாவட்டத்தில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் பவன் கல்யாண் கூறியதாவது:
நாட்டுக்கு இரு மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகள் தேவை. மொழி ரீதியான பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நாட்டில் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்கும். சிலர் சம்ஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. வணிக நோக்கத்துக்காக தமிழ்ப் படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட அனுமதிக்கும் தமிழக அரசியல்வாதிகள், ஹிந்தியை மட்டும் எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டிலிருந்து கிடைக்கும் பணம் வேண்டும். ஆனால், ஹிந்தி தேவையில்லையா? இது என்ன மாதிரியான தர்க்கம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பவன் கல்யாணின் இந்தப் பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்கள், சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் பவன் கல்யாணின் இந்தப் பேச்சை முன்வைத்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:
எங்கள் மீது ஹிந்தியை திணிக்காதீர்கள் என்பது அந்த மொழி மீதான வெறுப்பல்ல என்பதைத் தயவு செய்து பவன் கல்யாணிடம் யாராவது சொல்லுங்கள். எங்கள் தாய்மொழியையும் தாயையும் சுயமரியாதையுடன் காப்போம் என்பதே அதன் அர்த்தம் என்றார்.