எம்புரான் படத்துக்கு எதிராக மனு: வழக்கு தொடர்ந்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்

கேரள உயர் நீதிமன்றமும் விஜீஷின் மனு குறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி கோடை விடுமுறைக்குப் பின்பே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியது.
எம்புரான் படத்துக்கு எதிராக மனு: வழக்கு தொடர்ந்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்
1 min read

எம்புரான் படத்துக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி விவி விஜீஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் 27 அன்று வெளியான திரைப்படம் எம்புரான். படம் வெளியான பிறகு, 2002 குஜராத் கலவரத்துடன் சில காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் ஒத்துப்போவதாக விமர்சனங்கள் வந்தன. படத்திலுள்ள எதிர்மறைக் கதாபாத்திரத்தின் பெயர் பல்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி.

இது குஜராத் கலவரத்தில் தொடர்புடைய பாபுபாய் படேல் என்பவரைக் குறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருடைய ஆதரவாளர்களால் இவர் பாபு பஜ்ரங்கி என்று தான் அறியப்படுவார்.

இப்படத்துக்கு வலதுசாரி சிந்தனையுடையவர்கள் மற்றும் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து, படத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள படக் குழு திட்டமிட்டுள்ளது. சர்ச்சை தொடர்பாக மோகன்லால் வெளிப்படையாக மன்னிப்பையும் கேட்டுக்கொண்டார்.

எம்புரான் படத்தின் திரையிடலுக்கு எதிராக பாஜக நிர்வாகி விவி விஜீஷ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவர் திரிச்சூர் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். திரிச்சூர் நகர மாவட்டத் தலைவர் ஜஸ்டின் ஜேக்கப்பால் கட்சியின் ஒழுங்கை மீறி செயல்படுவதாகக் கூறி நீக்கப்பட்டுள்ளார்.

எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தான் நீக்கப்படுவதற்கு மூலக் காரணமா என்பது உறுதிபடத் தெரியவில்லை.

இதனிடையே, கேரள உயர் நீதிமன்றமும் விஜீஷின் மனு குறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி கோடை விடுமுறைக்குப் பின்பே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிஎஸ் டயஸ், "நீங்கள் எம்புரான் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? இந்தப் படத்தால் வன்முறை ஏற்பட்டதாக ஒரு புகாரையாவது காட்டுங்கள். காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கையாவது காட்டுங்கள். இது வெறும் விளம்பரத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனு" என்று கூறி இடைக்கால நிவாரணம் எதையும் வழங்காமல் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in